

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
எனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டது. அதற்கு இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டரீதியாகவும், தொகுதி மறுவரையிலும் வழிவகை செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.