Last Updated : 01 Aug, 2021 07:13 PM

 

Published : 01 Aug 2021 07:13 PM
Last Updated : 01 Aug 2021 07:13 PM

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தாமதமானதால் ஆத்திரம் மலைவாழ் இளைஞரை தாக்கி ரூ.46 ஆயிரம் அபகரிப்பு

ஏலகிரி மலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த 5 பேர் ஒன்று சேர்ந்து மலைவாழ் இளைஞரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.46 ஆயிரம் பணத்தை பறித்துச்சென்றர். இந்த வழக்கில் 5 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(30). இவர் ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க நேற்று (ஜூலை.31) இரவு 7 மணிக்கு சென்றார். ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்ற கணேஷ் தன்னிடம் இருந்த 4 ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ரூ.46 ஆயிரம் பணம் எடுத்தார்.

அப்போது, அதே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வெளியே 5 பேர் காத்திருந்தனர். கணேஷ் பணம் எடுக்க காலதாமதமானதால் வெளியே காத்திருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்று எவ்வளவு நேரம் பணம் எடுப்பாய் ? ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியுமா ? தெரியாதா ? எனக்கேட்டு அவரை ஆபாச வார்த்தைகளால் பேசினர்.

அப்போது, கணேஷூக்கும், அவர்களுக்கும் இடையே வாய் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த 5 பேர் ஒன்று சேர்ந்து கணேஷை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 1 செல்போன், ரூ.46 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதைதொடர்ந்து, அங்கு வந்த மலைவாழ் மக்கள் காயமடைந்த கணேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைதொடர்ந்து, மலைவாழ் இளைஞரை தாக்கிய 5 பேர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஏலகிரி காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதைதொடர்ந்து, கணேஷை தாக்கிய நபர்கள் யாரென விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (29), காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (32), சக்தி அமர்நாத்(29), ஆர்.பிரசாந்த்(28 ), மற்றொரு ஆர்.பிரசாந்த்(30), பெங்களூருவைச் சேர்ந்த டி.பிரசாந்த்(29) என்பதும், இவர்கள் 5 பேரும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்ததும், புங்கனூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்த போது கணேஷூடன் ஏற்பட்ட தகறாரில் அவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்றதும் தெரியவந்தது.

இதைதொடந்து, அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஏலகிரி காவல் துறையினர் பிரசாந்த், சக்தி அமர்நாத், வெங்கடேசன் உட்பட 5 பேரை இன்று கைது செய்தனர். இதில், ஆர்.பிரசாந்த் (28) என்பவர் கிருஷ்ணகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x