Published : 01 Aug 2021 01:32 PM
Last Updated : 01 Aug 2021 01:32 PM

முன்னாள் திமுக எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை: வங்கி அறிவிப்பு

கரூர்

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

கரூர் தொகுதி முன்னாள் எம்.பி.யும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி (85), திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். தொழிலதிபரான இவருக்கு கரூர் மாவட்டம் மாயனூரில், கேசிபி பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வந்தது. புதுச்சேரியில் தொழில் நிறுவனம் உள்ளன. கரூர், பொள்ளாச்சியில் சொத்துகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் கரூர் எம்.பி.யாக இருந்தார். அதன்பின் 2009-ம் ஆண்டு கரூர் தொகுதி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டப்போது, இந்திய அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புக் காட்டி எம்.பி. வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்புக் காட்டியதில் 2-வது இடத்தில் இருந்தார். அத்தேர்தலில் மக்களவை முன்னாள் துணைத்தலைவர் தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார்.

அதன்பின் 2011-ம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பின் 2016-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அதேயாண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றபோது போட்டியிட்டார். அதில், தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயர், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பை கோவை ஸ்டேட் வங்கி இன்று (ஆக.1-ம் தேதி) நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி ரூ.81,00,54,930, கனரா வங்கி ரூ.57,16,63,451, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.35,39,55,747, ஐடிபிஐ ரூ.24,22,26,555 என ரூ.197,79,00,683 கோடி சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமைப் பிரச்சனை உள்ளதால் அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x