Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

தமிழகத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் 50 சதவீதம் அதிக மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

ஜுலை மாதத்துக்கான நிகழ்தகவு வானிலை முன்னறிவிப் பின்படி, இந்தியாவின் சிலமாநிலங்களில் மழை இயல்பாகவோ, இயல்பைவிட குறைவாகவோ பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இயல்பைவிட 50 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது

ஜுலை முதல் வாரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பதிவானது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 90.1மி.மீ. மழை, குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 5.60 மி.மீ. மழை பதிவானது.

ஜுலை 2-வது வாரத்தில் வளிமண்டலத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக பரவலாக மிதமானது முதல்கனமழை பதிவானது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 105.2 மி.மீ. மழை பதிவானது.

ஜுலை 3-வது வாரத்தில் வளிமண்டல சுழற்சி, திசைவேக மாறுபாடு மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக பரவலாக மிதமானது முதல் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 119 மி.மீ. மழை பதிவானது.

ஜுலை 4-வது வாரம் மற்றும் மாத இறுதி நாட்களில்குறிப்பிடத்தக்க அம்சம் ஏதும்இல்லை. வெப்பச் சலனம், தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரிமாவட்டத்தில் 209.1 மி.மீ. பதிவானது.

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் பதிவானசராசரி மழை அளவு 186.9 மி.மீ. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 125 மி.மீ. மழைதான் பெய்யும். எனவே, இந்த ஆண்டு வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x