நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நில அளவீடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த தனி நீதிபதி, "நவீனஇயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாட்களில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்பவழங்க வேண்டும். நில அளவீட்டுக்கு தனிப்பதிவேடு பராமரிக்கவேண்டும். நில அளவையர்கள் குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நில அளவையர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி, நில அளவையர்கள் குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாதுஎன நில அளவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்துசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு மற்றும் அதன் அடிப்படையில் நில அளவை ஆணையரின் உத்தரவு ஆகியவற்றை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in