Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக அரக்கோணம் தடத்தில் இன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 10.45 மணி முதல் மதியம் 12.45 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும். திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 11.25, 11.45, மதியம் 12.55, 1.30 மணிக்கும், ஆவடிக்கு மதியம் 12.20 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.

இதேபோல், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 10.30 மற்றும் 11.15 மணிக்கும், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 11.10 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் உட்பட 9 மின்சார ரயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி, அன்னனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், பெரம்பூர் லோகோ, பெரம்பூர் கேரேஜ் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டும் மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் 2-ம் தேதி முதல் (சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 4 மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

இதன்படி கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை தாம்பரம் வழியாக காலை 9.45 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம், சென்னை கடற்கரை வழியாக மதியம் 1.45 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வழியாக மாலை 5.05 மணிக்கு தாம்பரம் செல்லும். தாம்பரத்தில் இருந்து மாலை 5.58 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வழியாக இரவு 8.50 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x