Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் நாளை மனு கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே தேர்தல் நடத்தாத மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சபைக்கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு கமல் அறிவுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே, கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பதில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருகிறார். கிராமசபை கூட்டம் நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு வல்லுநர்கள் மூலம் இணைய வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ம் தேதி (நாளை) தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு அளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x