

நமது எம்ஜிஆர் நாளிதழில் தன்னைப் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக அந்நாளிதழின் நிறுவனர் ஜெயலலிதா மீது டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை ஜார்ஜ்டவுன் 7வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 12.6.15ம் தேதி வெளியான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் என்னைப்பற்றி நெரிசல் ராமசாமி என்ற தலைப்பில் கேலி, கிண்டல் செய்து அவதூறாக கேலி சித்திரம் போட்டுள்ளனர்.
வேண்டுமென்றே என்னை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த கேலிசித்திரத்தை பிரசுரித்துள்ளனர்.
எனவே, நமது எம்ஜிஆர் நாளிதழின் நிறுவனரான தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அந்த இதழின் வெளியீட்டாளரான எஸ்.எஸ்.பூங்குன்றன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.