Last Updated : 31 Jul, 2021 09:28 PM

 

Published : 31 Jul 2021 09:28 PM
Last Updated : 31 Jul 2021 09:28 PM

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.15 வரை நீட்டிப்பு: 50 %பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

புதுச்சேரி

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக.15-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் செயலரும், நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு துறை சிறப்பு செயலருமான விக்ராந்த் ராஜா இன்று(ஜூலை 31) இரவு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘‘ புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, மேலும் ஆக.15-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசு துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம்போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கம் விடுதிகள், தேநீர்கடைகள், பழக்கடைகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 9 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். சில்லரை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.
பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம். அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். உடற்பயிற்க்கூடம், யோகா பயிற்சிக்கும் 50 சதவீதம் பேருடன் அனுமதிக்கப்படுகிறது.

சினிமா படப்பிடிப்பு மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்தளமான சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலா பகுதிகளில், வழக்கம் போல் 50 சதவீதம் பொது மக்களுடன் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. புதிய தளர்வாக, திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்கப்பட்டு, அதில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதித்து இரவு 9 மணி வரை இயங்கலாம்.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x