புத்திக்கூர்மை, தந்திரத்தால் வென்ற குளச்சல் போர் வெற்றி தினம்: நினைவுத் தூணுக்கு ராணுவ அதிகாரிகள் வீரவணக்கம்

நினைவுத் தூணுக்கு வீரவணக்கம்.
நினைவுத் தூணுக்கு வீரவணக்கம்.
Updated on
1 min read

குளச்சலில் டச்சுப் படைகள் போரில் தோற்று மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடைந்ததை நினைவுகூரும் போர் வெற்றி தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, குளச்சல் விக்டரி பில்லர் நினைவுத் தூணுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த காலத்தில், இந்திய வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக டச்சுப் படை தென்மாநிலங்களைக் குறிவைத்துப் போர் செய்துவந்தது. அப்போது, பத்மநாபபுரம் அரண்மனையைக் கைப்பற்ற முயன்றது. இதற்காக, 1741-ம் ஆண்டு ஜனவரி மாதம் டிலனாய் தலைமையிலான டச்சுப்படை குளச்சல் கடல் பகுதியில் கப்பலில் கடல் மார்க்கமாக வந்து முகாமிட்டது.

இதனை அறிந்த மார்த்தாண்ட வர்மா தனது தளபதி அனந்த பத்மநாபன் தலைமையிலான சிறிய படைகளுடன் குளச்சல் கடற்கரையில் முகாமிட்டு அங்குள்ள மீனவர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான பனை மரங்களைக் கடற்கரையின் முன்பு வர்ணம் பூசி பீரங்கிகள் போன்று வடிவமைத்து, மாட்டு வண்டிகளைில் இணைத்து வைத்திருந்தார்.

அத்துடன் மீனவர்களின் கையில் துடுப்புகளைக் கொடுத்து துப்பாக்கிகள் ஏந்தி நிற்பது போல் நிற்க வைத்தனர். இதைக் கண்ட டச்சுப் படையினர் மிகப்பெரிய பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய படைவீரர்களுடன் மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்களை எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறார் என அஞ்சி, டிலனாய் தலைமையிலான டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடைந்தனர்.

புத்திக்கூர்மை, மற்றும் தந்திரத்தால் பெற்ற இந்தப் போர் வெற்றியை பறைசாற்றும் வகையில், 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி குளச்சலில் போர் நடைபெற்ற இடத்தில் ஒரே கல்லால் ஆன 20 அடி உயரம் கொண்ட விக்டரி என்ற வெற்றித் தூணை மன்னர் மார்த்தாண்ட வர்மா நிறுவி போரில் உயிரை மாய்த்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

இந்த வரலாற்றையும், போர் வெற்றியையும் நினைவுகூரும் வகையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளச்சல் விக்டரி வெற்றித் தூணுக்கு ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதி திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ தளத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரர்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்விழாவை குமரி மாவட்ட நிர்வாகமும் அரசு விழாவாக நடத்தி வந்த நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டில் இருந்து அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 280-வது நினைவு தினமான இன்று மெட்ராஸ் ரெஜிமென்ட் 11-வது பெட்டாலியன் ராணுவ வீரர்கள் வாத்தியங்கள் முழங்க குளச்சல் வெற்றித் தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில், ராணுவ கேப்டன் சஞ்சய் ரத்தன், பிரின்ஸ் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in