Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவி, ஓய்வூதிய நிலுவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன், தயாநிதிமாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார், அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகள், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தை கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். தொடர்ந்து, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் 15 தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் கடந்த 2006 செப்டம்பர் முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

பிறகு, பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக2008-ம் ஆண்டு முதல் மாவட்டம்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் திறக்கப்பட்டதுடன், 2009 முதல் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டன. இவ்வாறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கியதன் மூலம், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

1.68 லட்சம் பேர் மனு

இந்நிலையில், 18 அமைப்புசாரா நலவாரியங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 75 ஆயிரம்மனுக்கள் பெறப்பட்டன. இதுதவிர, 93,221 ஓய்வூதியர்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த மனுக்கள்மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் நலத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருமணம், மகப்பேறு, கல்வி, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரியவர்களில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.10.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த விழாவில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.24 கோடி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத் தலைவர் பொன்.குமார், தொழிலாளர் துறை செயலர் கிர்லோஷ்குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x