

மீன்வளத் துறையின் இணையதளத்தை தமிழில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் இன்ஜின், வலை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நல வாரியத்தில் வழங்கப்படும் உதவி தொகைகள் உட்பட பல்வேறு விவரங்கள் மீன்வளத் துறையின் இணையதளத்தில் உள்ளது.
இருப்பினும், இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளதால், சாமானிய மீனவர்களால் தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, மீன்வளத் துறையின் இணையதளத்தை தமிழில் வடிவமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழில் வடிவமைக்க மீன்வளத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழில் வடிவமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். சாமானிய மீனவர்களும் மீன்வளத் துறையின் இணையதளத்தை எளிமையாக பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.