மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம்: தமிழக அரசு

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம்: தமிழக அரசு
Updated on
1 min read

மதுரை எய்ம்ஸில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகக் கட்டிடத்தில் தொடங்கி எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு தொடங்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை அரசு வழக்கறிஞர் வீரகதிரவன் தாக்கல் செய்தார்.

அதில், 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தோப்பூரில் மாநில அரசு 224.24 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. அதில் நிரந்தரக் கட்டிடம் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த ஆவலில் உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்புக் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கைக்கு தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்புக் கல்வியாண்டிலேயே எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது தொடர்பான எய்ம்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் திட்ட வரைவு மற்றும் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்காக மாநில அரசு ஆவலுடன் காத்திருக்கிறது''.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in