Last Updated : 30 Jul, 2021 04:57 PM

 

Published : 30 Jul 2021 04:57 PM
Last Updated : 30 Jul 2021 04:57 PM

கரோனா 3-வது அலை வந்தால் எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தை மேம்படுத்தி, அழகுபடுத்தும் பணி, தாமிரபரணியில் 22 இடங்களில் சுத்தப்படுத்தும் பணி, திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடுதல், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல், அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி கலையரங்கம் மற்றும் ஒலி ஒளி காட்சி கூடம் திறப்பு, கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளை புனரமைப்பு செய்வது, அவற்றை ஆவணப்படுத்துவது, வேய்ந்தான்குளத்தை அழகுபடுத்துவது, தாமிரபரணி ஆற்றங்கறையில் அம்பாசமுத்திரத்திலிருந்து தொடங்கி கடைசி வரையில் தன்னார்வலர்கள், வனத்துறையினருடன் இணைந்து மரங்களை நட்டு வளர்த்தெடுக்கும் பணிகள், ஆற்றங்கரையிலுள்ள காலத்தால் அழியாத கல்மண்டபங்களை சீரமைக்கும் முயற்சிகள் என்று பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1237 நீர்நிலைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறை, அந்தந்த உள்ளாட்சித்துறை கட்டுப்பாடுகளில் இந்த குளங்கள் இருக்கின்றன.

இவற்றை எந்த வகையில் புனரமைப்பு செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி கலையரங்கம், மற்றும் ஒளி ஒலி காட்சியையும் அமைத்துள்ளோம்.

இந்த திறந்தவெளி கலையரங்கம் மூலம் நமது பகுதி கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் அருங்காட்சியகத்தின் பார்வையிடும் மாணவ, மாணவிகள் கடந்த கால வரலாறுகளை ஒலி ஒளி வடிவில் பார்க்க முடியும். அத்துடன் தமிழகத்தில் இருக்கும் பிற அருங்காட்சிய சிற்பங்களையும் இங்கிருந்தே பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கரோனா 3-வது அலை வந்தால் நாம் தயார் நிலையில் இருப்பது குறித்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளளது. விரும்பதகாத சூழல் ஏற்பட்டாலும் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முழு தயார்நிலையில் இருக்கின்றன. குழந்தைகளுக்கென்று 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் செலுத்தி வருகிறோம். அத்துடன் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சிர் வே.விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x