Last Updated : 30 Jul, 2021 05:12 PM

 

Published : 30 Jul 2021 05:12 PM
Last Updated : 30 Jul 2021 05:12 PM

பணம் இருந்தும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க மனமில்லாதவர் நாராயணசாமி: அதிமுக குற்றச்சாட்டு

பணம் இருந்தும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க மனமில்லாதவர் நாராயணசாமி என புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று (ஜூலை 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு இது தொடர்பாக ஆராய ஒரு குழு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை தற்போது வழங்கியுள்ளது. அதற்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்வு செய்யப்பட்ட அரசு என்பது மக்களுக்கான பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க வேண்டும். அதன்படி புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரூ.500 முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த நாராயணசாமி ரூ.30 கூட உயர்த்தித் தரவில்லை.

தற்போது உதவிதொகை உயர்த்தப்பட்டிருப்பதை பாராட்ட மனமில்லாமல் விரக்தியின் விளிம்பில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் உயர்த்தப்பட்ட 100 உதவித்தொகையை கூட 5 ஆண்டு காலம் நாராயணசாமி வழங்கவில்லை.

போதிய பணம் இருந்தது. அவருக்கு மனம் தான் இல்லை. நாராயணசாமி அவரது செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சியை கவிழ்த்திருப்பதாகக் கூறி வருகிறார். அவர் செல்போன் எப்படி ஒட்டு கேட்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமியிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு அதிமுக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது எதுவும் செய்யாத நாராயணசாமி 6 மாத காலம் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.’’இவ்வாறு அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x