Published : 30 Jul 2021 04:40 PM
Last Updated : 30 Jul 2021 04:40 PM

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: சசிகலா புதிய திருத்த மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கிலிருந்து டிடிவி.தினகரனின் பெயரை நீக்கி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் நியமிக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலாவும், தினகரனும் தொடர்ந்த வழக்கு சென்னை நகர 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அமமுக கட்சியை தொடங்கிவிட்டதால் வழக்கிலிருந்து விலகுவதாக தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி திருத்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருத்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x