ஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்கு டெண்டர் கோரும்போது, ஊழல், முறைகேடு புகார்களைத் தவிர்க்க, டெண்டர் கோருவது, ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “தற்போது கால்வாய் சுத்தப்படுத்தும் பணிக்காக டெண்டர் பெற்ற நிறுவனம் உரிய தகுதியைப் பெற்ற நிறுவனம் அல்ல. மாநிலத்தில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரும்போது உள்ளாட்சி அமைப்புகள் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. டெண்டர் வெளிப்படைத் தன்மை, சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த டெண்டரில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபின், டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் கோர அவகாசம் வழங்க வேண்டும் என பம்மல் நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, புதிய டெண்டர் கோர அனுமதித்த நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும்போது, ஊழல், முறைகேடு புகார்களைத் தவிர்க்க டெண்டர் வெளிப்படைத் தன்மை சட்ட விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in