Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

பாஜக மாநில அமைப்பாளர் உள்பட 7 பேர் சேர்ந்து இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சிசிடிவி காட்சிகள் அழிப்பு: வன்கொடுமை தடுப்புப் பிரிவுக்கு வழக்கை மாற்ற கோரிக்கை

புதுச்சேரி

திருச்சி இளைஞரை புதுச்சேரியில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில், சிசிடிவி காட்சிகள் அழிக் கப்பட்டுள்ளதால் அதை மீண்டும் எடுக்க சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சூழலில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புப் பிரிவுக்கு இவ்வழக்கை மாற்ற வாய்ப்புள்ளது.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி நள்ளிரவு மேட்டுப்பாளையம் நான்கு முனை சாலை சந்திப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஓரமாக உறங்கச் சென்றுள்ளார்.

அப்போது, சதீஷ்குமாரை பார்த்த பெட்ரோல் பங்க் உரிமை யாளரும், பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜ மவுரியா உள்பட 7 பேர் சேர்ந்து, யாரென்று கேட்டு சதீஷ்குமாரை தாக்கினர். ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கில் இருந்து பெட் ரோல் பிடித்து சதீஷ்குமார் மீது ஊற்றிதீ வைத்துள்ளனர். தற்போது தீக்காயங்களுடன் சதீஷ்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

4 பேர் தலைமறைவு

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்துகாலாப்பட்டு சிறையில் அடைத் தனர். தலைமறைவான மூவரைதனிப்படையினர் தேடி வருகின் றனர்.

இதற்கிடையில் மருத்துவமனை யில் சிகிச்சையில் இருக்கும் சதீஷ்குமாரிடம், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சதீஷ்குமாரை பார்க்க அவரது தாய், சகோதரர், உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் சதீஷ்குமார் தந்த தகவல்கள் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீஸில் மற்றொரு புகார் மனு தரப்பட்டுள்ளது. அதில், சாதி பெயரைச் சொல்லி திட்டியபடி தீ வைத்து எரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் விசாரித்த போது, “பெட்ரோல் பங்கில் இளைஞருக்கு தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. அதை மீண்டும் எடுக்க சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளோம். மாஜிஸ்திரேட்டிடம் தந்த வாக்கு மூலத்தில் சாதி பெயரைச் சொல்லிதிட்டியதாக தகவல் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குமூலத்தில் இத்தகவல்இருந்தால், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட் டோர் மீது வழக்குப்பதிவாகும்” என்று தெரிவித்தனர்.

முக்கிய வழக்கில் பாஜக பிர முகர் ராஜமவுரியா சிக்கியுள்ளதால் அவரை கட்சியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினர் மருத்துவமனைக்குச் சென்று சதீஷ் குமாரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து மக் கள் கண்காணிப்பகம் ஒருங் கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறுகையில், “சாதி பெயரை கூறி சதீஷ்குமார் மீது தாக்குதல் நடந்துள்ளது.

தீ வைப்புக்குப் பிறகு போலீஸார் கூட அவருக்கு உதவவில்லை. சதீஷ்குமாரே மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தி எரித்தோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புப்பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்து வோம்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x