Published : 29 Jul 2021 06:30 PM
Last Updated : 29 Jul 2021 06:30 PM

மனநலம் குன்றி சாலையில் திரிந்த 2 நபர்கள்: மீட்பு மையத்தில் சேர்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் மனநலம் குன்றி சாலையில் திரிந்த 2 நபர்களை மீட்டு, அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

தண்டையார்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு வாகனத்தில் இன்று வீதி, வீதியாகச் சென்று, மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து, அவர்களை அந்த வாகனங்களில் மீட்டு வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்து உணவு வழங்கி, தேவையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’மனநலம் குன்றி சாலையில் இருப்போரைக் கண்டறிந்து காப்பகங்களுக்குக் கொண்டுவந்து பராமரிப்பதும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுமான இந்தத் திட்டம் திமுக மாநகராட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக அன்று சென்னையில் 1,830 பேர் பயனடைந்தார்கள்.

இப்படிக் கண்டறிபவர்களுக்குப் பெரிய அளவில் முகம் மறைந்து தெரியாத அளவுக்கு முடி வளர்ந்து இருப்பதை முடித்திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவர்களுடைய புகைப்படங்களையெல்லாம் இணையதளத்தில் வெளியிட்ட பிறகு ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்வது என்பது கடந்த திமுக மாநகராட்சி நிர்வாகத்தின்போது நடைபெற்ற நிகழ்வாகும்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தேசிய நலவாழ்வு மையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,021 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் பல்வேறு தெருக்களில் சுற்றித் திரிவதாகத் தகவல் பெறப்பட்டதன் அடிப்படையில் நானும், தேசிய நலவாழ்வு மையக் குழு இயக்குநர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் உருவான 'மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம்' என்கிற இத்திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

வடசென்னைப் பகுதியில் 2 பேரைக் கண்டறிந்து இம்மையத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். முதலில் அவர்களது உடல்நலனை மருத்துவர்கள் ஆராய்ந்து சிகிச்சை அளித்த பிறகு, அவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் போடப்படும்.

இம்மையத்தில் மனநலம் குறித்த அறிவுரைகள் மட்டுமல்லாது, சிகிச்சைகளும் வழங்கப்பட இருக்கின்றன".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x