Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM
தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 3.07 மீட்டர் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக நீர்வள ஆதாரத் துறை, மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் இந்த ஆண்டு ஜூலைமாதத்தை ஒப்பிட்டால் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வேலூரில் 3.07 மீட்டர் உயர்வு
தென்மேற்குப் பருவமழை காரணமாக அதிகபட்சமாக வேலூரில்நிலத்தடி நீர் மட்டம் 3.07 மீட்டர் உயர்ந்து இந்த ஆண்டு 8.21 மீட்டராக உள்ளது. மிகக்குறைவாக ஈரோடு மாவட்டத்தில் 0.09 மீட்டர்மட்டுமே நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
திருவள்ளூர், தருமபுரி, கடலூர்,விழுப்புரம், கரூர், நாமக்கல், தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 1 மீட்டருக்கும் அதிகமாகநிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் 0.09 மீட்டர் முதல் 0.73 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீ்ர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT