Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்: மநீம தலைவர் கமல்ஹாசன் உறுதி

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 கொண்டு வருவதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது கருத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டெல்லி சென்றார்.

அங்கிருந்து நேற்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

டெல்லி சென்று நான் தெரிவித்த கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. எனது கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்திருந்தும் அந்த கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அளித்ததற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தொடக்க காலம் முதல் செய்து கொண்டிருக்கும் வேலைதான். இப்போதும் அது தொடர்கிறது என நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலுக்காக எங்கள் கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு ``தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கும், தமிழர்களுக்கும், தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாகவே பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x