Published : 28 Jul 2021 04:51 PM
Last Updated : 28 Jul 2021 04:51 PM

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ந.சுந்தரத்தேவன் தலைமையில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகின்றன.

சட்டப்பேரவையில் 21.06.2021 அன்று ஆளுநர் ஆற்றிய உரையில் 'நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காகத் தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்' என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்புக்கிணங்க, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவினை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் தொழில்துறைச் செயலாளருமான ந.சுந்தரத்தேவன் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை இன்று அமைத்துத் தமிழக அரசு ஆணையிட்டது.

இதர உறுப்பினர்கள்:

i). பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், பகுதி நேர உறுப்பினர், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு (SDPC) மற்றும் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS).

ii). பிந்து ஆனந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் Financial Inclusion, SME Finance and Securitization குழுக்களின் முன்னாள் உறுப்பினர்.

iii) பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இந்தியச் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

iv) ஹேமலதா அண்ணாமலை, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஆம்பியர் வெகிகல்ஸ் மற்றும் முன்னாள் தலைவர், TiE Women.

v) இஸ்ரார் அகமத், மண்டலத் தலைவர், இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு (FIEO).

vi) அன்புராஜன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் (TANSTIA)

vii) ஆனந்த், முன்னாள் பங்குதாரர், எர்னஸ்ட் & யங் மற்றும் பட்டயக் கணக்காளர், இந்திய ரிசர்வ் வங்கியின் Asset Reconstruction Companies குழுவின் முன்னாள் உறுப்பினர்.

இக்குழுவில் கீழ்க்காணும் அலுவலர்கள் அலுவல்சாரா உறுப்பினர்களாக இருப்பர்

viii) செயலாளர், நிதித்துறை.

ix) செயலாளர், தொழில்துறை,

x) செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

xi) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் (உறுப்பினர் - செயலாளர்)

xii) தலைவர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு

மேற்காண் குழு தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான பரிந்துரைகளை வழங்கும். இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் வசதி பெறவும் மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனை வழங்கும்.

மேலும், இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடர்பாக ஆராயும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழு மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கையை அரசுக்கு அளிக்கும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x