Published : 28 Jul 2021 04:16 PM
Last Updated : 28 Jul 2021 04:16 PM

நீட் தேர்வு; திமுக அரசு மாணவர்களை அலைக்கழிக்கிறது: கடம்பூர் ராஜு விமர்சனம்

கடம்பூர் சிதம்பராபுரத்தில் அதிமுகவினர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாமல் மாணவர்களை திமுக அரசு அலைக்கழிக்கிறது என, அதிமுக முன்னாள் அமைச்சர், கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டி, இன்று (ஜூலை 28) கயத்தாறு அருகே கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள கடம்பூர் ராஜு வீட்டின் முன்பு அவரது தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தேர்தலின்போது திமுக வஞ்சகமாக மக்களிடம் மாயத்தோற்றத்தை உருவாக்கி, நடைமுறைக்கு சாத்தியப்படாத, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கியதன் காரணமாக, தற்காலிகமான, ஒரு மாயை வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையில் தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய எந்த அம்சமும் இடம்பெறவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நடப்பாண்டிலேயே நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களுக்கு இருக்காது. விதிவிலக்கு நிச்சயமாக நாங்கள் பெற்றுத்தருவோம் என்ற நிறைவேற்ற முடியாத, சாத்தியப்படாத வாக்குறுதிகளை வழங்கினர். அவர்கள் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாமல் மாணவர்களை இன்று அலைக்கழிக்கின்றனர்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடும். எங்கள் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் நீட் இருக்காது என்று பேசினார். இந்தக் கல்வியாண்டில் கடைசி வரை நீட் தேர்வு இருக்காது எனக் கூறிவிட்டு, மாணவர்கள் அந்த மனநிலைக்கு வந்தபின்னர் இறுதிக் கட்டத்தில் மீண்டும் நீட் தேர்வு தான், வேறு வழியில்லை எனக் கூறுகின்றனர்.

இதேபோல், திமுக அறிக்கையில் தெரிவித்த பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவோம் போன்றவையும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு.

டிடிவி தினகரன் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். அவரே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. மக்களவை, சட்டப்பேரவை ஆகிய 2 பொதுத் தேர்தல்களிலும் மக்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர். எனவே, வெற்றி - தோல்வி அரசியலில் சகஜம் என்பது அவர்களுக்குப் பொருந்தாது. எங்கள் கட்சியைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை.

அறநிலையத்துறை மட்டுமல்ல, களப் பணியாளர்களாகப் பேரூராட்சிப் பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையில் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியாளர்களை நியமித்தோம். கடந்த 1-ம் தேதியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான களப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதுகுறித்து தலைமையிடம் பேசி, கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்".

இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x