'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்: என்.சங்கரய்யா அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் என்.சங்கரய்யா: கோப்புப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் என்.சங்கரய்யா: கோப்புப்படம்
Updated on
1 min read

'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) உத்தரவிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 'தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும்

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தகைசால் தமிழர்' விருது முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதுக்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் - 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழக மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in