Last Updated : 28 Jul, 2021 01:39 PM

 

Published : 28 Jul 2021 01:39 PM
Last Updated : 28 Jul 2021 01:39 PM

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.500; கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்  

புதுச்சேரி

புதுச்சேரியில் கூடுதலாக உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.500, கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றவுடன், புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவையர், முதிர்கன்னியர், திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பயனாளிகளுக்குக் கூடுதலாக மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையொப்பமிட்டார். இதனிடையே முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தும் வகையில், முதியோர் ஓய்வூதிய விதிகளைத் திருத்துவதற்கான அறிவிப்பாணையை வெளியிட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் முன்வரைவுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 23-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் கூடுதலாக உயர்த்தப்பட்ட ரூ.500 உதவித்தொகை மற்றும் கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. முதல் கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உயதர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் கூடிய புதிய உதவித்தொகை பெறும் ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் தேனி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், திருமுருகன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உயர்த்தப்பட்ட ரூ.500 கூடுதல் உதவித்தொகையானது வரும் ஆகஸ்ட் மாதம் அனைத்துப் பயனாளிகளுக்கும் வயதுக்கேற்ப உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதன்படி 18 முதல் 54 வயது வரை உள்ள விதவையர்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், 55 முதல் 59 வயது வரை உள்ள முதியோர்களுக்கு மாதம் ரூ.1500-ல் இருந்து 2,000 ஆகவும், 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு மாதம் ரூ.2,000-ல் இருந்து 2,500 ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு மாதம் ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500 ஆகவும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1,54,847 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் கூடுதலாக புதிய 10 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறவிருக்கின்றனர். இதன்படி 1,64,847 பயனாளிகள் பயன்பெறுவர். இதனிடையே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ சமூதாய மக்களுக்கு வழங்கிவரும் உதவித்தொகையும் ரூ.500 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x