Published : 28 Jul 2021 01:17 PM
Last Updated : 28 Jul 2021 01:17 PM

வன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா? - இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா என்பது குறித்து, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை எதிர்த்துப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று (ஜூலை 27) அரசாணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா என, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்கும்படி, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x