Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம்?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவராக விரைவில் வைத்திலிங்கத்தை நியமிக்க அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் உதயமாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாக இருந்த கண்ணன், ரங்கசாமி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கினாலும் பலர் கட்சியை விட்டு வெளியேறினாலும் காங்கிரஸ் தொடர்ந்து பலத்தை நிரூபித்து வந்துள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த அசாதாரண சூழலுக்கு நடுவில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியானது, அப்போதைய அமைச்சர் நமச்சிவாயத்திடம் இருந்து ஏ.வி.சுப்பிரமணியத்திடம் தரப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி மீது அதிருப்தி தெரிவித்து, அப்போது அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர் பாஜகவிலும், அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் என்ஆர் காங்கிரஸிலும் இணைந்தனர். இதனால் 5 ஆண்டுகள் பூர்த்தியாகாமலேயே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி பாஜகவில் இணைந்தனர்.

2021 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. முக்கியமாக ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரையே நிறுத்த முடியாமல் சுயேச்சைக்கு ஆதரவளித்தது. இறுதியில் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் இத்தேர்தலில் வென்றது.

படுதோல்வியால் காங்கிரஸ் கட்சி புதுவையில் மேலும் கரையத் தொடங்கியது. முக்கிய போராட்டங்களில் கூட போதிய அளவிற்கு கட்சி நிர்வாகிகள் பங்கேற்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு புதுச்சேரி காங்கிரஸில் மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு கட்சித் தலைமையை சந்தித்தனர். அதேபோல் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும் டெல்லியில் உள்ளார். கட்சித் தலைமை கருத்து கேட்டதில் பெரும்பாலானோர் மாநிலத் தலைவராக வைத்திலிங்கத்தை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய பொறுப்புக்கு முயற்சி

அதனால் விரைவில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக எம்பி வைத்திலிங்கத்தை நியமிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி அளவில் பொறுப்பு பெற விரும்பவில்லை. அகில இந்திய அளவில் பொறுப்பு பெற காய்களை நகர்த்தி வருகிறார்” என்றும் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x