Last Updated : 27 Jul, 2021 07:12 PM

 

Published : 27 Jul 2021 07:12 PM
Last Updated : 27 Jul 2021 07:12 PM

மூன்று கவுன்சிலர்களோடு கட்சி தாவிய அதிமுக ஒன்றிய தலைவர்: திமுக கைவசமானது சிவகங்கை ஒன்றியம்

சென்னையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்த சிவகங்கை ஒன்றியத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர்.

சிவகங்கை

மூன்று கவுன்சிலர்களோடு அதிமுக ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்ததால், சிவகங்கை ஒன்றியம் திமுக கைவசமானது.

சிவகங்கை ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுகவில் 8 பேர், பாஜக, தேமுதிகவில் தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் அதிமுக தரப்பிற்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அதிமுகவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன் துணைத் தலைவராகவும் இருந்தனர்.

திமுக தரப்பில் திமுகவில் 6 பேர், காங்கிரஸில் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் இருந்தனர். மேலும் அமமுக கவுன்சிலரும் திமுக ஆதரவாக இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமமுக கவுன்சிலர் பத்மாவதி திமுகவில் இணைந்தார். இதனால் திமுக பலம் 8 ஆனது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த சிலரும் திமுகவிற்கு தாவுவதற்கு தயாராக இருந்தனர்.

இதனால் தனது பதவி ஆபத்து ஏற்படும் என கருதிய ஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தனது ஆதரவு கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தேமுதிகவைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய மூன்று கவுன்சிலர்களுடன் இன்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 12-ஆக மாறியதால், சிவகங்கை ஒன்றியம் திமுக வசமானது.

தற்போது அதிமுகவிற்கு 6 பேர் ஆதரவு மட்டுமே உள்ளதால், துணைத் தலைவர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றம்:

அதிமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்து திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற நினைத்திருந்த நிலையில் அதிமுக ஒன்றியத் தலைவரே திமுகவிற்கு வந்ததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து துணைத் தலைவர் பதவியாவது கைப்பற்ற வேண்டுமென திமுக கவுன்சிலர்கள் சிலர் அமைச்சரிடம் காய்நகர்த்த தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x