கரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்ட பணிகளை முடிக்கக் கூடுதல் அவகாசம் கோரி சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மாநகராட்சிப் பணிகளான சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியும், டெண்டர் ஒப்பந்தங்களை ரத்து செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ''கரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் கட்டுமானப் பணியாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டபோது, கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கரோனோவின் 2-வது அலையைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த டெண்டர்களை ரத்து செய்யக் கூடாது என்று சென்னை மாநகராட்சிக்குக் கடந்த ஜூன் 22ஆம் தேதி மனு அளித்தோம். அந்த மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in