Published : 27 Jul 2021 03:14 PM
Last Updated : 27 Jul 2021 03:14 PM

'சர்கார்' படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

'சர்கார்' படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை சிசிபி போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் 'சர்கார்'. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் அரசின் விலையில்லா திட்டங்களில் வழங்கப்பட்ட பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதாகக் கூறி, தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முருகதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், படத்தைத் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.

திரைப்படங்களை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணைக்கு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு இன்று நடைபெற்றது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, திரைப்படத்தைத் தணிக்கை செய்த பிறகு அதற்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு, தனி நபரால் கொடுக்கப்பட புகார் என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x