Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 27-ம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

28, 29, 30-ம் தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய 5மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும்அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

26-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 16 செமீ, தேவாலாவில் 10 செமீ, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

28-ம் தேதி வரை வடகிழக்கு, மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும், 29, 30-ம் தேதிகளில் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x