Published : 19 Feb 2016 08:26 AM
Last Updated : 19 Feb 2016 08:26 AM

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு கோரி ஆன்லைன் கையெழுத்து இயக்கம்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரி ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நேற்று ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (சென்னை கோட்டம்-2) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெசிந்தா குவாட்ரஸ் பங்கேற்று, www.change.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது அரசியல் கோரிக்கை இல்லை. அது இந்த சமூகத்துக்கான கோரிக்கை. இதில் அனைவரும் கையெழுத்திட வேண்டும்” என்றார்.

சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா சட்டமேலவையில் காத்திருப்பில் உள்ளது. நாட்டின் சட்டத்தை இயற்றக்கூடிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அதை நிறைவேற்றக் கோரியே இந்த ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். நாடு முழுவதும் 10 லட்சம் கையெழுத்தை பெற திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x