Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய 5 தலங்களில் உள்ள மலைக் கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோயில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வயது முதிர்ந்தோர் வசதிக்காக மருதமலை கோயிலில் மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோயில்கள் மட்டுமே பிரசித்தி பெற்ற கோயில்களாக கருதப்பட்டன. தற்போது 539 கோயில்கள் பிரசித்தி பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளதோடு, அவற்றை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய மலைக் கோயில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகியவற்றில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
கோயில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் வரும் வட்டியை கோயில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2 புராதன சிலைகள் அமெரிக்காவிலும், ஒரு சிலை சிங்கப்பூரிலும் உள்ளன. விரைவில் அவை தமிழகம் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. 180 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT