Published : 26 Jul 2021 09:43 PM
Last Updated : 26 Jul 2021 09:43 PM

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அரசாணை: பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.

பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்." என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், "அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.

அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை, வரவேற்று ராமதாஸ் ட்விட்டரில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x