Published : 26 Jul 2021 08:24 PM
Last Updated : 26 Jul 2021 08:24 PM

தீவிர நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலமாக டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்ததார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில், “டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

டெங்கு மற்றும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 2715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கபட்டு தீவிர நடவடிக்கை எடுக்கபட்டதில் கடந்த ஜனவரி மாதம் மாநிலத்தில் 402 பேர் டெங்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாத பாதிப்பு 54 பேர் என்று பெருமளவில் குறைந்துள்ளது. தொடர்ந்து, புகை போடுதல், கொசு ஓழிப்புக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயின் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து வழக்கின் விசாரணை நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x