Last Updated : 26 Jul, 2021 05:47 PM

 

Published : 26 Jul 2021 05:47 PM
Last Updated : 26 Jul 2021 05:47 PM

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.33.30 லட்சம் மோசடி; 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

பிரதிநிதித்துவப் படம்

கோவை

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் ரூ.33.30 லட்சம் மோசடி செய்த நான்கு பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மடத்துப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூபதி, அபிநயா, கோபியை அடுத்த பிச்சாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமார் ஆகியோர் இணைந்து 'தீரன் பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை தொடங்கினர்.

பின்னர், அந்த நிறுவனத்தின் பண்ணை திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து கொடுத்து, 900 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் அளிப்பதோடு, அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் அளிப்போம். மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக ரூ.12 ஆயிரம், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ. 16 ஆயிரம் அளிப்பதாக விளம்பரம் செய்தனர்.

இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், நிறுவனமே 700 நாட்டுக்கோழிக்குஞ்சுகளை பராமரித்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அளிக்கும் எனவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் அளிப்பதாகவும், 3 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனவும் விளம்பரப்படுத்தினர்.

இதை நம்பி, 14 பேர் ரூ.33.30 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பராமரிப்புத்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்காமல் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த ஏ.வி.ஆர்.அருண்பாலாஜி என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்ட நான்குபேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை, மொத்தம் ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து இன்று (ஜூலை 26) தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x