Published : 26 Jul 2021 04:57 PM
Last Updated : 26 Jul 2021 04:57 PM

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறுகிறது மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை: 100 ஐசியூ படுக்கை வசதியுடன் ‘ஹைடெக்’ சிகிச்சைக்கு ஏற்பாடு  

மதுரை

மதுரை அருகே உள்ள தோப்பூர் அரசு மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனையைப் போல் அனைத்து மருத்துவ சிகிச்சையும் கிடைக்கக்கூடிய வகையில் 100 ஐசியூ படுக்கைகள் உள்பட 200 படுக்கை வசதியுடன் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது.

மதுரை அருகே உள்ள தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த மருத்துமனையில் கரோனாவுக்கு முன் வரை காசநோய் மற்றும் காலரா நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

காசநோய் மருத்துவ சிகிச்சையில் தமிழகத்திற்கே தோப்பூர் அரசு மருத்துவமனை முன் உதாரணமாக திகழ்ந்து வந்தது. தனியார் காப்பரேட் மருத்துமவனைகளுக்கு இணையாக அங்கு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வந்ததால் இந்த மருத்துவமனை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால், வசதிபடைத்தவர்கள் கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் இந்த மருத்துவமனையை நாடி வந்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று நோய் பரவியதும், போதிய படுக்கை வசதியில்லாமல் தோப்பூர் காசநோய் மருத்துவமனையும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாறியது. காசநோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரே கரோனா சிகிச்சை வழங்கத்தொடங்கினர்.

ஆனால், அங்கு ஐசியூ வார்டு, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட அதி நவீன மருத்துவக்கருவிகள் இல்லாததால் திடீரன்று உயிருக்குப்போராடும் நோயாளிகள், நோய் தீவிரமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை.

அதனால், நகரின் மையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றாக புறநகரில் தோப்பூர் காசநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறித்து ‘டீன்’ ரத்தினவேலு தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் கரோனா உள்ளிட்ட அனைத்து உயர் மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சைக்கும் நோயாளிகள் நகரின் மையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து வர வேண்டிய உள்ளது. அதனால், வரும்வழியிலே நோயாளிகள் இறக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

மதுரைக்கு உள்ளூர் நோயாளிகள் மட்டுமில்லாது ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கூட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றாக காசநோய்க்கு மட்டுமே சிகிச்சை வழங்கிய தோப்பூர் அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அங்கு 100 சாதாரண படுக்கைகள், 100 ஐசியூ படுக்கைகள் கொண்ட ஹைடெக் வார்டுகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான கட்டிட வசதிகள் ஏற்கெனவே தயாராக உள்ளன. மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக்குழுவினர் மட்டுமே நியமிக்க வேண்டும். தற்போது இதற்காக திட்டம் தயார் செய்து அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் தமிழக அரசுக்கு திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் வழங்கியதும், தோப்பூர் அரசு ராஜாஜி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கிவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x