Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

கரோனா நிவாரணத் தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் வரும் 31 வரை பெறலாம்: புதிய அட்டைகளுக்கு ஆகஸ்ட் முதல் பொருள் விநியோகம்

சென்னை

கரோனா மற்றும் இதர காரணங்களால் கரோனா நிவாரணத் தொகை பெறாதவர்கள் வரும் 31-ம் தேதி வரை அவரவர் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். புதியகுடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன்பொருள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மே 15-ம் தேதி,முதல் தவணையாக ரூ.2 ஆயிரம்,ஜூன் 15-ம் தேதி ரூ.2 ஆயிரம் எனமொத்தம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் 15-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன.

இதில், 99 சதவீதத்துக்கு மேற்பட்ட அட்டைதாரர்கள் தற்போதுநிவாரணத் தொகை, மளிகைப் பொருள் தொகுப்பினை பெற்றுள்ளனர்.

அதேநேரம் இவற்றை இதுவரை பெறாதவர்கள் வரும் 31-ம்தேதிக்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல்..

கரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் வரும் 31-ம்தேதிக்குள் பெற இயலாத, கடந்தஜூன் 15-ம் தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் இருந்தே வழங்கப்படும்.

கடந்த மே 10-ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

எனவே, புதிய குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

அட்டைதாரர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று தீரும் வரை முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைப் பின்பற்றி அவசியத் தேவையின்றிப் பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தையும் காத்துகரோனா தொற்றை வென்றிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x