Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

கொடைக்கானல் மலை கிராமங்களில் விதிமீறல்; வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கும் பயணிகள் : கேள்விக்குறியாகும் பாதுகாப்பு தங்கும் பயணிகள்

கொடைக்கானல் பூம்பாறை அருகே சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம்.

கொடைக்கானல்

கொடைக்கானல் மலை கிராமங் களில் திறந்தவெளியில் கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படவில்லை. விடுதிகளும் முழுமை யாகத் திறக்கப்படவில்லை. இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூம்பாறை, குண்டுபட்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களுக்குச் செல்கின்றனர். அங்குள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் காலியிடங்களில் கூடாரம் அமைத்து தங்க சிலர் விதிகளை மீறி ஏற்பாடு செய்கின்றனர்.

கொடைக்கானல் மலைப் பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது.

இங்கு யானைகள் நடமாட்டமும்அதிகம் உள்ளது. எனவே, கூடாரம் அமைப்பவர்கள் மீது வனத்துறையினர், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

வனத் துறையினர் கூறியதாவது: கூடாரம் அமைத்து தங்குபவர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தீயை மூட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சியால் வனப்பகுதியில் தீ பரவும் அபாயம் உள்ளது. சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளால் தாக்கப்படலாம். விலங்குகளின் வழித்தடத்தை மறைப்பதால் மனித - விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கூடாரங்கள் அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x