Published : 25 Jul 2021 07:20 PM
Last Updated : 25 Jul 2021 07:20 PM

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய நீலகிரி பெண் ராதிகா: மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி 

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் தனது உரையின்போது "மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன" என்று கூறினார்.

பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், ராதிகா சாஸ்திரியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு அவர் தனது ட்விட்டரில் "இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோ அவசர கால ஊர்தி சேவை அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்போடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆட்டோ அவசரகால ஊர்தியில் பிராணவாயு உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

மலைப் பிரதேசங்களில் அரசு அவசர சிகிச்சை ஊர்திகள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் சென்று சேவை செய்யும் வகையில் இந்த ஆட்டோ இயக்கப்படவுள்ளது. குறுகலான பாதைகளில் பயணித்து குக்கிராமங்களில் வசிக்கும் நோயாளிகளையும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்கு இந்தப் புதிய அவசர சிகிச்சை ஊர்தி பேருதவியாக இருக்கும்.

சமுதாயத்திற்கு தம்மால் ஏதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி கூறினார். தற்போது குன்னூர், கோத்தகிரி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் 6 ஆட்டோ அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x