Last Updated : 25 Jul, 2021 04:09 PM

 

Published : 25 Jul 2021 04:09 PM
Last Updated : 25 Jul 2021 04:09 PM

புதுச்சேரியில் மது விலை உயர்வால் சாராயக் கடைகள் அதிக தொகைக்கு ஏலம்: கள்ளுக்கடைகள் ஏலம் மந்தம்

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் மதுவிலை உயர்வால் சாராயக்கடைகள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 108 கடைகளில் 101 கடைகளை ஏலம் விடப்பட்டு கடந்தமுறையை விட கிட்டத்தட்ட ரூ. 30 கோடி அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் கள்ளுக்கடைகள் ஏலம் மிகவும் மந்தமாக உள்ளது. பலரும் இக்கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மீதமுள்ள கடைகளுக்கு திங்கள்கிழமை ஏலம் நடக்கிறது.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 108 சாராயக்கடைகள், 89 கள்ளுக்கடைகள் உள்ளன. இக்கடைகளை நடத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்லைனில் ஏலம் விடப்படும். சாராயக் கடைகளுக்கான 3 ஆண்டு கால குத்தகை கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்தது. கடந்தமாதம் ஏலம் நடத்தப்பட வேண்டும். கரோனா பரவல் காரணமாக கிஸ்தி தொகை பெற்றுக்கொண்டு ஒரு மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுவையில் உள்ள சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கான ஆன்லைன் ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மதுபானங்கள் விலை தற்போது புதுச்சேரியில் எம்ஆர்பியை விட 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் சாராயக்கடைகளை நாட தொடங்கியுள்ளனர். இதனால் சாராயக்கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.

கலால்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி, காரைக்காலில் 108 சாராயக்கடைகளில் 101 சாராயக்கடைகள் ஏலம் போனது. அதேநேரத்தில் கள்ளுக்கடை ஏலத்தில் 89 கடைகளில் 37 கடைகள் மட்டுமே ஏலம் போனது. ஏலம்போகாத 7 சாராயக்கடைகள், 52 கள்ளுக்கடைகளுக்கு நாளை (ஜூலை 26)மீண்டும் ஏலம் நடக்கிறது." என்றனர்.

அரசுக்கு ரூ. 30 கோடி வரை வருவாய்

இம்முறை சாராயக்கடைகள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்தமுறை ரூ.22 லட்சத்துக்கு ஏலம்போன கருவடிக்கப்பம் சாராயக்கடை இம்முறை ரூ.37 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சேதராப்பட்டு கடை, ரூ.37 லட்சத்துக்கு ஏலம்போனது. கடந்தமுறை இந்த கடை ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போனது. கடந்தமுறை ரூ.15 லட்சத்துக்கு ஏலம்போன மணமேடு சாராயக்கடை இப்போது ரூ.28 லட்சத்துக்கு ஏலம்போனது.

இதுபேல பல சாராயக்கடைகள் இந்த ஆண்டு அதிக தொகைக்கு ஏலம்போனது. வழக்கமாக சாராயக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி வருவாய் கிடைக்கும். இம்முறை சாராயக்கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியதால் 101 கடைகள் ரூ.110 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ரூ. 30 கோடி வரை கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x