Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

2 மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு நூலகங்கள் மீண்டும் திறப்பு: கரோனா நெறிமுறைகளுடன் வாசகர்கள் அனுமதி

தமிழகத்தில் கரோனா பரவலால் 2 மாதங்களாகமூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரத்தால்கடந்தமே மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு நூலகங்கள் மே 10-ம் தேதி முதல் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல்படிப்படியாக குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில், வாசகர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு நூலகங்கள் செயல்பட பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே நூலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாசகர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரது உடல் வெப்பமும் பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி பயன்பாடு, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

வாசகர்கள் சுட்டிக்காட்டும் நூல்களை நூலகப் பணியாளர்கள் கையுறை அணிந்தபடி எடுத்துத் தந்தனர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நூலகங்கள் திறக்கப்படவில்லை. 15 வயதுக்குகீழ் உள்ள சிறார்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் நூலகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. கட்டுப்பாடுகளுடன் நூலகங்கள் திறக்கப்பட்டிருப்பது, வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x