Published : 24 Jul 2021 06:38 PM
Last Updated : 24 Jul 2021 06:38 PM

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர சிறப்புக் குழு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

மதுரை சாத்தமங்கலம் அரசு சிறுபான்மையினர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். 

மதுரை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசின் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.

தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மதுரை மாநகராட்சி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர், மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும். அதிமுக சரியாக ஆட்சி செய்யாததால் மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர். 2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்துள்ளனர். 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது,

தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்படும், என்றார்.

தொடர்ந்து, செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். மதுரை தெற்குவாசல் பகுதியில் முஸ்லிம் மிஷன் மருத்துவமனை மற்றும் மருந்து கடையையும் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் காங் துணைத்தலைவர் இதயத்துல்லா, நவாஸ்கனி எம்பி, மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, இந்திய தேசிய லீக் பசீர் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x