Published : 24 Jul 2021 02:40 PM
Last Updated : 24 Jul 2021 02:40 PM

ஜெனரேட்டர் புகையால் நேர்ந்த விபரீதம்; மூச்சுத் திணறலால் இருவர் பலி: மூவர் கவலைக்கிடம்

மூர்த்தி - சுபாஷ்

உதகை

உதகை அருகே ஜெனரேட்டர் புகையால் அறை முழுவதும் புகை சூழ்ந்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் இருவர் உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரட்டி கிராமம். இந்த கிராமத்தில் தெப்ப பண்டிகை கடந்த 22-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வந்தது. பண்டிகையை ஒட்டி சோலூரைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் இருந்து கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

தற்போது கரோனா காலம் என்பதால், ஊருக்கு 2 பேர் வந்து பண்டிகையில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 22-ம் தேதி திருவிழா தொடங்கியதும், ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர்.

கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் மூர்த்தி (49), கீழ்தட்டட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி மகன் சுபாஷ் (36) உட்பட ரத்தீஸ் (21), விக்னேஷ் (28), அஜித்குமார்(24) ஆகியோர், நேற்று (ஜூலை 23) 2-வது நாளாக நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், நேற்று இரவு கோயில் அருகில் உள்ள ஒரு அறையில் தங்கியுள்ளனர். மழை காரணமாக திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஜெனரேட்டரை இயக்கித் தங்கியுள்ளனர். அப்போது, அப்பகுதியில் மழை மற்றும் காற்று அதிகமாக இருந்ததால் அறையில் தங்கியவர்கள் கதவை மூடித் தூங்கியுள்ளனர். இதனையடுத்து, கோயில் பணிகளை முடித்து மேலும் 5 பேர் அந்த அறைக்குள் இரவு சுமார் 2:15 மணிக்குத் தூங்கச் சென்றுள்ளனர்.

அவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, தூங்கியவர்கள் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆகாஷ் என்பவர் ஊர் மக்களுக்குத் தகவல் அளித்ததன் பேரில், மயக்கமடைந்தவர்களை உடனடியாக உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு சுபாஷ், மூர்த்தி ஆகிய இருவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், மூவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் கூறும்போது, "ஜெனரேட்டரில் இருந்து வந்த புகை அறை முழுவதும் சூழ்ந்துள்ளது. இதில் அங்கு தூங்கிய 5 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். மூச்சுத் திணறல் காரணமாக இருவர் உயிரிழந்துவிட்டனர். மூவர் மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

பண்டிகை கொண்டாடச் சென்றவர்கள், கோயிலிலேயே மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x