Published : 10 Feb 2016 08:00 PM
Last Updated : 10 Feb 2016 08:00 PM

வண்டலூர் விஜிபி மைதானத்தில் பாமக மாநாடு நடத்த இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வண்டலூர் விஜிபி மைதானத்தில் பாமக மாநில மாநாடு நடத்த எந்தவொரு ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி மைதானத்தில் வரும் 14-ம் தேதி மாநில மாநாடு நடத்த பாமக முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு மாநாடு நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘அந்த நிலத்தை யாருக்கும் உரிமம் மாற்றம் செய்யத்தான் தடை உள்ளது. எனவே, பாமக மாநாடு நடத்த போலீஸார் அனுமதிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அங்கு மாநாட்டு பணிகளை பாமகவினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டிஜிபி, காஞ்சிபுரம் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ‘சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்குகளில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதுவரை அந்த இடத்தில் யாரும் மாநாடு நடத்த அனுமதிக்க முடியாது. அந்த நிலத்தை யாருக்கும் மாற்றம் செய்யவோ அல்லது வில்லங்கம் ஏற்படுத்தவோ கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நிலத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் அங்கு பாமக மாநாடு நடத்த அனுமதி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சர்ச்சைக்குரிய நிலத்தை யாருக்கும் உரிமம் மாற்றம் செய்யவோ, வடிவத்தை மாற்றவோ, வில்லங்கம் ஏற்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கும், விஜிபி நிர்வாகத்துக்கும் தடை விதித்து உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி விஜிபி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கட்சியின் மாநில மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. தனி நீதிபதியும் இதை கவனத்தில் கொள்ள வில்லை. இப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

நாளை விசாரணை

சர்ச்சைக்குரிய நிலத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அங்கு ஒரு கட்சியின் மாநாடு நடத்த அனுமதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை அந்த இடத்தில் மாநில மாநாடு நடத்த பாமகவினர் எந்த ஒரு ஆயத்தப் பணிகளையோ, தற்காலிகப் பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x