Published : 24 Jul 2021 09:44 AM
Last Updated : 24 Jul 2021 09:44 AM

சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

சென்னை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று (ஜூலை 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (நேற்று - ஜூலை 23) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த 9 பயனாளிகளுக்கு ரூ.67.10 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம், ஆட்டோ மற்றும் புகைப்படக்கருவிகள் வழங்கப்பட்டது. மேலும், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளியின் ஆசிரியர்களுக்குத் தலா ரூ.5,000 வீதம் 45 ஆசிரியர்களுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ரூ.1.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா 121 நபர்களுக்கு வழங்கப்பட்டது. ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டிலான நடமாடும் மீன் உணவகம் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், 'ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகள் பள்ளி இடைநிற்றலைக் கண்காணித்துத் தொடர்ந்து அவர்களின் கல்விக் கற்றலை உறுதி செய்யம் வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப் பணிகள் கரோனா காலத்தில் சரிவர நடைபெறவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும். அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x