Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய பணிக்காலம் நீட்டிப்பு: 11-வது முறையாக 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். முன்னதாக, அந்த ஆண்டு செப்டம்பர் 22-ல் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலதரப்பினரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் கடந்த 2017 செப்டம்பர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரின் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், போயஸ் தோட்ட இல்லத்தில் தங்கியிருந்தவர்கள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஆஜராகி, விளக்கம் அளிக்கமுடியாது. அந்த ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆணையத்தின் பணிக்காலம் மட்டும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 10-வது முறையாக நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது. இச்சூழலில், 11-வது முறையாக ஆணையத்தின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x