Last Updated : 23 Jul, 2021 06:20 PM

 

Published : 23 Jul 2021 06:20 PM
Last Updated : 23 Jul 2021 06:20 PM

கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது; விநாடிக்கு 14 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

கோவை

கனமழையால் பில்லூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியான, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மற்றும் கேரளக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாகக் கொண்டுள்ள, பவானியாற்றின் குறுக்கே, இந்த அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.

கடந்த சில நாட்களாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் நீர்வரத்தால், பில்லூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில், பருவமழையின் தீவிரம் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் நீர்மட்டம் 97.5 அடியை இன்று (ஜூலை 23) அதிகாலை கடந்து அணை நிரம்பியது.

விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி

அப்போதைய சூழலில், பில்லூர் அணைக்கு, விநாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருந்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக இன்று பவானியாற்றில் திறந்து விடப்படுகிறது. இதில், மின் உற்பத்திக்காக மட்டும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பில்லூர் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர்.

அணையில் இருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானியாற்றுக் கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியர் ஆய்வு

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றைக் கடக்கவோ முயல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மேடான பகுதிகளுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் இன்று அதிகாலை பில்லூர் அணையைப் பார்வையிட்டு, நீர்வழிப்பாதை கரையோரத்தில் உள்ள மக்களிடம் எச்சரிக்கை விழிப்புணர்வு செய்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக, மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர், அவசர கால உதவிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, "தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் கரையோரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்துக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுடன் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதிகாரிகளும் நீரோட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x