Last Updated : 23 Jul, 2021 04:29 PM

 

Published : 23 Jul 2021 04:29 PM
Last Updated : 23 Jul 2021 04:29 PM

பிரசவத்துக்கு வந்த இளம்பெண் உயிரிழந்த வழக்கு; வட்டாட்சியரிடம் விசாரணை அறிக்கை வழங்கிய போலீஸார்: உயர் நீதிமன்றம் கண்டனம்

தனியார் மருத்துவமனைக்குப் பிரசவத்துக்காக வந்த இளம்பெண் உயிரிழந்த வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் வட்டாட்சியரிடம் வழங்கியதை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

குமரி மாவட்டம் பேயன்குளத்தைச் சேர்ந்த செல்லசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''எனது மருமகள் நிவேதிதாவைப் பிரசவத்துக்காக மார்த்தாண்டம் பிபிகே மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி அவர் உயிரிழந்தார். புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. பின்னர், வழக்கில் மேல் நடவடிக்கை தேவையில்லை என வட்டாட்சியரிடம் போலீஸார் அறிக்கை அளித்தனர்.

மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் என் மருமகள் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பு விசாரணையைப் புதுக்கடை காவல் ஆய்வாளர் முடித்துவிட்டார். என் மகனிடம் விசாரணை நடத்தாமலேயே வழக்கை போலீஸார் முடித்துள்ளனர்.

எனவே என் மருமகள் உயிரிழந்த வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்து, ’’வழக்கின் விசாரணை அறிக்கையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், வட்டாட்சியரிடம் தாக்கல் செய்தது தவறு. எனவே, விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x