Published : 23 Jul 2021 03:15 PM
Last Updated : 23 Jul 2021 03:15 PM

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூலை 23) வெளியிட்ட அறிக்கை:

"தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

அவலாஞ்சி (நீலகிரி ) 16, நடுவட்டம் (நீலகிரி) 14, மேல் பவானி (நீலகிரி) 13, வால்பாறை (கோவை) 12, சின்னக்கல்லாறு (கோவை) 11, தேவலா (நீலகிரி) 10, பெரியாறு (தேனி) 9, குந்தா பிரிட்ஜ் (நீலகிரி) 6, தேக்கடி (தேனி) 5, அகரம் சீகூர் (பெரம்பலூர்) 4, தென்காசி 3, மைலாடி (கன்னியாகுமரி), தம்மம்பட்டி (சேலம்), பாபநாசம் (திருநெல்வேலி), தொழுதூர் (கடலூர்) தலா 2, சென்னை விமான நிலையம், ராசிபுரம் (நாமக்கல்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்:

23.07.2021 முதல் 24.07.2021 வரை: தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

23.07.2021 முதல் 25.07.2021 வரை: தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்:

23.07.2021 முதல் 27.03.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

23.07.2021 முதல் 27.07.2021 வரை: தென்மேற்கு அரபிக் கடல், மத்திய மேற்கு அரபிக் கடல் மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x